தமிழ் : தமிழர் வரலாறு expr:class='"loading" + data:blog.mobileClass'>

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழர் வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேரர் மன்னன் வரலாறு

  சேரர் மன்னன் வரலாறு 





சேரர்கள் 

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

மன்னர்கள் 
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

நகரங்கள் 
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.



சில அரசர்களின் ஆட்சியாண்டுகள்.
 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
 பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
 களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
 செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
 செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
 தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
 இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்

தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் 
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.



உதியஞ்சேரலாதன் – கி.பி. 45-70 
உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்” என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – கி.பி. 71-129 
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் “இமய வரம்பன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப்பாடியுள்ளனர்

வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.

முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் – கி.பி. 80-105 
பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – கி.பி. 106-130 
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ….சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்…. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம் 
பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.

செயல்கள் 
பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், “……இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்…..” என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.

சேரன் செங்குட்டுவன் – கி.பி. 129-184 
சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.

பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

வரலாற்றுத் தகவல்கள் 
தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை 
அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.

அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை – கி.பி. 123-148 
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.

இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு “கோ ஆதன்” என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 148-165 
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.

தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 165-180 
இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.


குட்டுவன் கோதை – கி.பி. 184-194 
குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.

சேரமான் வஞ்சன் 
சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.

மருதம் பாடிய இளங்கடுங்கோ 
மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.

சேரமான் கணைக்கால் இரும்பொறை 
சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். “மாக்கோதை” என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

சேக்கிழார் வரலாறு

 

சேக்கிழார் யார்?




“கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னாலும் சொன்னார்… அது குறித்து கிண்டலும் கேலியாகவும் சமூகவலைதளங்களில் எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

போகட்டும்..பழந்தமிழ் நாயகர்கள் பலரை நாம் மறந்துவிட்டோம். எடப்பாடி மூலமாகவாவது ஒருர இலக்கிய நாயகரின் பெயர் அடிபடுகிறதே. அவதுவரை மகிழ்ச்சிதான்.

இதோ.. சேக்கிழார் புராணத்தை.. அதுதான்.. அவரது வரலாற்றைப் பார்ப்போம்.

பெரியபுராணத்தின் ஆசிரியர் சேக்கிழார் ஆவார். இவரது இயற்பெயர் அருண்மொழித் தேவர் என்பதாகும். இளமையில் இந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டார்.  இவரது உடன் பிறந்தார் பாலறாவாயர் என்பவர்.

சேக்கிழார் பிறப்பு

தமிழ்நாட்டின் வடபகுதியைப் பண்டைய காலத்தில் தொண்டை நாடு என்று கூறுவர். இந்நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்து இருந்தனர். இப்பகுதிகளைக் கோட்டம் என்று அழைப்பர். அவ்விதம் பிரிக்கப்பட்ட 24 கோட்டங்களுள் புலியூர்க் கோட்டமும் ஒன்று. இப்புலியூர்க் கோட்டத்தின் உள் பிரிவாகிய குன்றைவள நாட்டின் தலைநகரம் குன்றத்தூர் ஆகும்.  இவ்வூரில் வாழ்ந்த வேளாளர் குலத்தில் சேக்கிழார் பிறந்தார்.




குடியும் குடியேற்றமும்

பண்டைநாளில் கரிகால் சோழமன்னன் நாற்பத்து எண்ணாயிரம் வேளாளர் குடும்பங்களைத் தொண்டை நாட்டில் குடி அமர்த்தினான். அவற்றுள் ஒன்றே சேக்கிழார் பிறந்த குடியும். உழவுத் தொழிலில் மேம்பட்ட வேளாளர் குடியில் சேக்கிழார் குடும்பம் சிறப்பு மிக்கது. இக்குடும்பமே சேக்கிழார் பிறந்த குடும்பம்.

சோழ நாட்டில் அமைச்சர் பணி

அருண்மொழித் தேவர் இளமையிலேயே கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கினார். இதனை அறிந்த சோழ மன்னன் அவரைச் சோழநாட்டின் அமைச்சராக நியமித்தான். உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டத்தையும் தந்து சிறப்பித்தான். அருண்மொழித்தேவர் சிறந்த சிவ பக்தர். சோழநாட்டுச் சைவக் கோயில்களில் ஒன்றாகிய திருநாகேசுவரம் கோயிலின் இறைவனிடத்தில் மிகுந்த பக்தி உடையவர். இக்கோயில் போன்றே தனது ஊராகிய குன்றத்தூரில்திருநாகேசுவரம் என்ற பெயரில் கோயில் ஒன்றைக் கட்டினார்.

காப்பியம் எழுதியமை

சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் சைவ சமயத்தார் பலர் வேற்றுச் சமய இலக்கியங்களில் சுவை கண்டு மூழ்கிப் போய் இருந்தனர். இதற்குச் சோழ மன்னனும் விதிவிலக்கல்ல. சோழ மன்னன் சமண சமயக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியில் மூழ்கிக் கிடந்தான். காப்பியச் சுவையில் ஆழ்ந்து கிடந்தான். இதனைக் கண்ட சேக்கிழார் சமண சமயக் காப்பிய மயக்கத்திலிருந்து சோழ மன்னனை மீட்க எண்ணினார். சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதிஆகிய நூல்கள் பற்றி மன்னனிடம் எடுத்துக் கூறினார். சிவனடியார்களின் வரலாற்றைக் கேட்டு மகிழ்ந்தான் மன்னன். இறைவனின் அருளைப் போற்றினான்; சிவனடியார்களை வணங்கினான். அடியார்களின் வரலாறுகளை யாவரும் அறிந்துகொள்ளும்படி செந்தமிழ்ப் பெருங்காப்பியமாகப் பாடுமாறு சேக்கிழாரைக் கேட்டுக்கொண்டான்.

இறைவன் அருள் பெற்றமை

அரசனது வேண்டுகோளை ஏற்றுச் சேக்கிழார் தில்லையை அடைந்தார் (தில்லை = சிதம்பரம்). சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். காப்பியம் பாடுவதற்கு இறைவன் அடியெடுத்துக் (காப்பியம் பாடுவதற்கு முதல் சொல்லை எடுத்துக் கூறுதல்) கொடுத்தார். “உலகு எலாம்” என்ற ஒலி வானில் ஒலித்தது. இதனைக் கேட்டுத் தில்லை வாழ் அந்தணர்கள் மகிழ்ந்தனர். இறைவனுக்குச் சாற்றிய திருநீற்றையும் (விபூதி) மாலையையும் சேக்கிழாருக்கு அணிவித்தனர். சேக்கிழாரும் மகிழ்ந்து தில்லையில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து காப்பியம் பாடத்தொடங்கினார். இறைவன் அடியெடுத்துக் கொடுத்த “உலகு எலாம்” என்ற சொல் தொடரை முதல் செய்யுளின் முதல் சீராக அமைத்தார். சிவனடியார்கள் அறுபத்து மூவரின் வரலாற்றையும் பாடி முடித்தார்.

பெரியபுராணம் அரங்கேற்றம் செய்தமை

காப்பியம் பாடி முடிக்கப்பெற்ற செய்தி அறிந்த சோழ மன்னன்தில்லையை அடைந்தான். சேக்கிழாரும் தில்லை வாழ் அந்தணர்களும்மன்னனை எதிர் கொண்டு அழைத்தார்கள். சேக்கிழாரின் சிவ வேடப்பொலிவைக் கண்ட மன்னன் அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அப்போது “வளவனே! சேக்கிழார் செய்த அடியார் வரலாற்றை நீ கேட்பாயாக” என்று வானத்தில் ஓர் ஒலி எழுந்தது. இதனைக் கேட்டு அனைவரும் பரவசம் அடைந்தனர்.


தொண்டர் கூட்டம்

திருத்தொண்டர் புராணத்தைக் கேட்க வருமாறு சிவனடியார்அனைவருக்கும் மன்னன் திருமுகம் (கடிதம்) அனுப்பினான். சைவத் தத்துவ அறிஞர்களும், புலவர்களும், சிற்றரசர்களும் தில்லையில் குழுமினர். சேக்கிழாரும் சித்திரைத் திங்களில் திருவாதிரை (27 நட்சத்திரங்களுள் ஒன்று) நாளில் பெரியபுராணத்தைக் கூறத் தொடங்கினார்.  அடுத்த ஆண்டு சித்திரைத் திங்கள் அதே திருவாதிரை நாளில் கூறி முடித்தார். தில்லை வாழ் அந்தணர்கள் பெரியபுராணத்தைச் சிவனாக எண்ணி வழிபட்டனர்.

மன்னனின் சிறப்புப் பெற்றமை

சோழ மன்னன் பெரியபுராணத்தை யானை மீது ஏற்றிச் சேக்கிழாரோடு தானும் யானை மீது அமர்ந்து வெண்சாமரம் (ஒருவகை விசிறி) வீசினான். யானையும் வீதி உலா வந்தது. சேக்கிழாரும், மன்னனும், அடியார்கள் புடைசூழக் கோயிலுக்கு வந்து நடராசர் முன்பு பெரியபுராணத்தை வைத்து வழிபட்டனர். மன்னன் சேக்கிழாருக்குத் தொண்டர் சீர்பரவுவார் (அடியார் புகழைப் போற்றுபவர்) என்ற பட்டத்தை வழங்கி வணங்கினான். பின்னர் மன்னன் பெரியபுராணத்தைச் செப்பு ஏட்டில் எழுதித் திருமுறைகளில் ஒன்றாக, பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்த்து வைத்தான். சேக்கிழாரின் இந்த வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்ற நூல் விரிவாக விளக்கி உள்ளது.

கம்பர் வாழ்க்கை வரலாறு

 

கம்பர் வாழ்க்கை வரலாறு



கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவிபாடும் ” என்ற பழமொழிக்கு ஏற்ப கம்பனது வாழ்க்கை முழுக்க தமிழ் இலக்கியமும், தமிழ் வளமையும் பொங்கி வழிந்து உள்ளது. கம்பத்துபுகழும், கவிபாடும் திற இன்றுவரை தமிழ் மக்களிடை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறத அவரது கற்பனை திறன் மற்று கவிபாடும் திறமை ஆகியவற்றை அவரது காலத்தில் இருந்த அனைத்து கவிஞர்களும் பாராட்டியுள்ளனர்.

Kambar 1-

கம்பன் தமிழ் மற்றும் சமஸ்கிரத மொழிகளில் புலமை பெற்று இருந்ததும் மேலும் அவர் தமிழ் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் அவர் கொண்ட பற்று மற்றும் அவர் தமிழ் மொழிக்காக ஆற்றிய தொண்டினையும் இந்த பதிவில் விரிவாக காணலாம் வாருங்கள்.

கம்பரின் பிறப்பு:

கம்பர் கி.பி 1180ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் என்கிற கிராமத்தில் ஆதித்தன் என்பவற்றின் மகனாக பிறந்தவர் கம்பர். கம்பனின் பெயர் அவர் காளி கோயிலின் அருகில் இருந்ததால் கம்பர் என்று பெயர் வந்தது என்று சிலரும், வேறு சிலர் கம்பங்கொல்லையை காத்து வந்தததால் கம்பன் என்று பெயர் வந்தது என்று சிலரும் கூறுகின்றனர்.

மற்றும் சிலர் அவரின் பெயர் வந்ததுக்கு காரணம் கம்பர் குலம் அதாவது காலி கோயிலில் பூஜை செய்பவர்கள் குடும்பம் கம்பர் குளம் என்று அழைக்கப்படுகிறது. அதனாலேயே அவருக்கு அந்த பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர் . இருந்தாலும் அவரது பெயர் எப்படி தழுவி வந்தது என்று இன்று வரை சரியாக தெரியவில்லை மரபு சார்ந்து இந்த பெயர் வந்தது என்று தமிழ் ஏடுகளில் இடம்பெற்றுள்ளது.

பெயர் – கம்பர்
பிறந்த ஆண்டு – கி.பி. 1180
தந்தையின் பெயர் – ஆதித்தன்
பிறந்த ஊர் – திருவழுந்தூர்...

kambar 2-

கம்பரின் இளம்வயது வாழ்க்கை:

கம்பர் அவரது இளம் வயதில் வள்ளி என்கிற தாசியை காதலித்து வந்ததாகவும் அவரை அந்த பெண் ஏற்று கொள்ளவில்லை என்று நம்பமுடியாத தகவல் உள்ளது. மேலும் அவருக்கு ஒரு மகன் உள்ளதாகவும் அவரது மகன் பெயர் அம்பிகாபதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவரின் மகனான அம்பிகாபதி அந்த காலத்தில் இருந்த சோழ மன்னனின் மகளை காதலித்ததாகவும் அதனால் கோவம் கொண்ட சோழ மன்னன் அம்பிகாபதியை கொன்றுவிட்டதாகவும் சில குறிப்புக்கள் கூறுகிறது. மேலும் அவரின் மகனை அவர் இழந்ததாலேயே புத்திர சோகத்தினை பற்றி கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ளதாக சில குறிப்புகள் கூறுகிறது.

கம்பரை ஆதரித்த வள்ளல்:

ஒச்சன் பரம்பரையில் பிறந்த கம்பர் ஆரம்ப காலத்தில் ஒரு செல்வமிக்க விவசாயி ஒருவரின் அரவணைப்பில் வளர்ந்தார் . அந்த காலத்தில் கம்பர் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் கைத்தேர்ந்தவரானார். அதோடு தனது கவித்திறனையும் கற்பனைத்திறனையும் மெருகேற்றி தன்னை செதுக்கி கொண்டார்.

பிறகு ஏகப்பட்ட பாடல்களையும், கவிதைகளையும் தமிழில் எழுதிய இவர் கவிபாடும் திறனையும் பெற்றார். பிறகு அரசவையில் சென்று கவிபாடி பரிசு பெறுவது மட்டுமின்றி அங்குள்ள சபையை தனது இலக்கிய திறன் மூலம் கவர்ந்து இழுக்கும் திறனையும் அவர் பெற்றிருந்தார்.

இதுபோன்று அவரின் திறமையை பார்த்த சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்து அவற்றின் தமிழ் திறனை நிலைநிறுத்த மிகுந்த உதவி புரிந்தார்.

கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்

kambar 4-

கம்பரின் அடைமொழி:

கவி பேரரசர் கம்பர்

கவிச்சக்கரவர்த்தி

கல்வியில் பெரியவர் கம்பர்

கம்பரின் அற்புத படைப்புகள்:

கம்பர் தனது படைப்புகளின் மூலம் தனது திறமையை மட்டும் வெளிப்படுத்தாமல் தமிழின் அழகையும், எளிமையினையும் தனது படைப்புகளின் மூலம் உலகிற்கு தந்தார். அவரின் படைப்புகளின் சிறு தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கம்ப ராமாயணம்

சரசுவதி அந்தாதி

சடகோபர் அந்தாதி

ஏரெழுபது

சிலையெழுபது

திருக்கைவழக்கம்

மும்மணிக்கோவை

Kambar 3-

கம்ப ராமாயணம்:

வால்மீகி எழுதிய ராமாயணத்தினை தழுவி கம்பர் தனது ராமாயணத்தை எழுதினார் அதுவே கம்பராமாயணம் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24000 ஈரடிகள் இடம்பெற்று இருந்தன. ஆனால், கம்பர் தனது புலமை மூலம் அதனை எளிமையாக்கி 11000 சந்தங்களில் தேவைக்கு ஏற்ப இடங்களை மாற்றி அமைத்து அதனை முறைப்படுத்தி வெளியிட்டார்.

இந்த கம்ப ராமாயணத்தினை வாசித்த புலவர்கள் கூட கம்பரை தங்களது மனதார வாழ்த்தி அவரின் திறனை கண்டு வியந்தனர். கம்ப ராமாயணத்தில் ராமர் முடிசூடும் வரை மட்டும் கம்பர் எழுதினார். பிற்பாதி ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

கம்பரின் இறப்பு:

ஈடு இணையற்ற கவிஞராக வலம் வந்த கம்பர் தனது 70ஆம் வயதில் 1250ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

கம்பரின் இறப்பு – கி.பி 1250

கம்பர் இந்த உலகில் இருந்து மறைந்தாலும் அவரது படைப்புகள் இன்னும் மறையவில்லை . தமிழ்மொழி எவ்வாறு தொன்மையாக உள்ளதோ அதேபோன்று கம்பரின் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் துளிகூட ஐயம் இல்லை.

ஸ்மார்ட் ரேசன் கார்டு தமிழ்நாட்டு

  ஸ்மார்ட் ரேஷன் கார்டு தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது வழக்கமான ரேஷன் கார்டின் மாற்றாகும், இது பொதுவாக சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட...